| நாடுகடந்த அரசு எதிர்நோக்கும் சவால்கள். - திபாகரன். |
|
|
|
| சிறப்பு கட்டுரைகள் |
| Friday, 14 May 2010 23:28 |
|
தமிழர் தாயகத்தில் ஏற்பட்டிருக்கும் அரசியல் தலைமைத்துவ இடைவெளியை நிரப்புவதற்கும், தாயகத்தில் அரசியல் அனாதைகள் ஆக்கப்பட்டிருக்கின்ற தமிழீழ மக்களுக்கு ஆதரவளித்து வழிப்படுத்தவும், உலகெங்கும் பரந்து வாழும் ஈழத்தமிழர்களை ஒருங்கிணைத்து தமிழீழ விடுதலைக்கான புதிய போராட்ட களத்தை திறந்து சர்வதேச பரிமானத்திற்கு இட்டுச் செல்லவும், ஒட்டுமொத்தத் தமிழினத்தின் அரசியல், பொருளாதார, சமூகப் பண்பாட்டு விழுமியங்களை பேணி நாடுகள் கடந்து ஈழத்தமிழர் தேசியத்தை ஒரு குடைக்கீழ் அணிதிரட்டி அதனுடாக தன்னாட்சியும், இறைமையும் கொண்ட சுதந்திர சோசலிச தமிழீழத்தை நிறுவுவதை நோக்காகக் கொண்டு தற்போது நடைபெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தல் தமிழ்பேசும் மக்கள் மத்தியில் உற்சாகத்தையும் புதிய சிந்தனை ஓட்டத்தையும், இது பற்றியதான எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.
நாடுகடந்த அரசு பற்றியதான அறிவிப்பை விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேச வெளியுறவுச் செயலாளர் திரு செ..பத்மநாதன் அவர்கள் அறிவித்திருந்தாலும். அவருக்குப் பி;ன் இவ்வரசு அமைப்பதற்கான ஒழுங்கு நடைவடிக்கைகள் யாவற்றையும் புலம்பெயர் தமிழ் அரசறிவியல் அறிஞர்களும், கல்விமான்களுமே முன்னெடுத்துச் செல்கின்றனர். இவ்வரசு அமைப்பதற்கான முதல்கட்ட நடவடிக்கையாக பல்துறை சார்ந்த நிபுணர்களைக் கொண்ட ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் நீண்டநாள் ஆய்வின் பி;ன் உருவான ஆய்வறிக்கையின் பிரகாரம் நாடுகடந்த தமிழிழ அரசாங்கத்திற்கான தேர்தலை நடத்துவதற்காக புலம்பெயர் நாடுகள் தழுவிய செயற்பாட்டுக்குழு உருவாக்கப்பட்டு தேர்தலுக்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு தேர்தலையும் நடாத்தி முடித்திருக்கிறார்கள். இங்கு நாடுகடந்த அரசு என்றும், அரசாங்கம் என்றும் குறிப்பிடப்படுகின்ற போதும் தேர்தல் ஒன்று நடாத்தப்படுவது அரசாங்கத்திற்குரியது. அரசுக்கானது அல்ல. அரசு என்பது ஏற்கனவே உருவாகி விட்டது. அரசு என்கின்ற போது தமிழ்த்தேசிய பொதுஉணர்வுப் தன்மையிலிருந்து பிறந்துவிட்டது. இவ்வரசின் முக்கிய அங்கமாக மதியுரைஞர்குழு, நாடுகள் வாரியான செயற்குழு, தேர்தல் ஆணையகம், தமிழீழ மக்களின் நிறுவனங்களும், பொதுக்கட்டமைப்புக்களும், மற்றும் தமிழீழத் தேசியத்தை ஆதரிக்கின்ற மக்களும் அடங்குகின்றனர். இதிலிருந்து அரசு என்பதற்குரிய விளக்கத்தை விளங்கிக்கொள்ளமுடியும். அதாவது ஒரு சமூகத்திற்கோ, அல்லது பல்லினச் சமூகமோ பொதுவான நோக்கங்களை அடைந்து கொள்ளும் பொருட்டு அமைக்கப்படுகின்ற ஒரு பெரும் கட்;டமைப்பே அரசாகின்றது. அதனுடைய கடமை, சமூகத்தைக் கட்டுப்படுத்தி ஆட்சி செய்து, பேணிப்பாதுகாப்பது. இதனை அரசு தனது முகவரான அரசாங்கத்தினூடாக நிறைவேற்றுகின்றது. ஆகவே தமிழீழ நாடுகடந்த அரசு செயற்பட வேண்டுமாயின் அரசாங்கம் என்கின்ற செயற்பாட்டு நிறுவனத்தை உருவாக்க வேண்டும். எனவேதான் நாடுகடந்த அரசாங்கத்திற்கான தேர்தல் நடைபெற்றிருக்கின்றது. ஆனால் தேர்தல் முடிவுடன் பல்வேறுபட்ட முரண்நிலையான கருத்துப்பிரதிவாதங்கள் கிளம்பியிருக்கி;றது அவற்றில் பிரான்சிலும், லண்டனிலும், கனடாவிலும் ஒருசில வாக்குச் சாவடிகளில் நிகழ்ந்த வாக்குமோசடியும் அதனால் ஏற்பட்டிருக்கும் இழுபறிநிலையும் விரும்பத்தகாதது. தமிழீழ அரசிற்காக நம்பிக்கையோடு வாக்களித்து காத்திருக்கும் மக்களுக்கு ஒரு நல்ல செய்தியை அறிவிக்க வேண்டிய கடைப்பாடு தேர்தல் ஆணையகத்திற்கு உண்டு. எனவே வாக்கு மோசடி நிகழ்ந்த பகுதிக்கான மறுவாக்கு பதிவினையோ அல்லது மோசடியையோ தவிர்க்கக்கூடியதான மாற்று நடவடிக்கையையோ மேற்கொண்டு குறித்த பகுதிக்கான உண்மையான பேராளர்களின் விபரங்களை அறிவிக்க வேண்டியது நடுகடந்த அரசாங்கத் தேர்தல் ஆணையகத்தின் உடனடிக்கடமையாகும். மேலும் தென்மேற்கு லண்டன் பகுதியில் நடைபெற்ற தேர்தலில் மோசடிகள் இடம்பெற்றதான முறைப்பாட்டின் பின்னர் முறைகேடுகள் நடந்தது பற்றிய விசாரணைகள் திருப்தியளிப்பதாகத் தெரியவில்லை. தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காக நீண்டகாலம் உழைத்தவர்களும், போராட்டம் சார்பான அனுபவ முதிர்ச்சி பெற்றவர்களும், மக்கள் மத்தியில் பிரபல்யமானவர்கள் அதிகூடிய வாக்குகளைப் பெற்றிருந்தார்கள். இவ்வாறானவர்களை ஓருங்கட்டுவதற்காகவும், சந்தேகத்திற்கிடமானவர்களை இதனுள்ளே திணிப்பதற்காகவுமே திட்டமிட்ட முறையில் மோசடிபற்றி முறைப்பாடு உருவாக்கப்பட்டதா என்ற கேள்வி எழுகின்றது. இதனை வலுவூட்டும் வகையிலேயே மேற்குறிப்பிடப்பட்ட பிரபலமானவர்கள் இப்போட்டியிலிருந்து சுயமாக விலகுவதாக அறிவித்ததும், அதன்பின்னான நிகழ்வுகளும் இவர்களை விலகும்படி யாராவது நிர்ப்பந்தித்தார்களா என்ற கேள்வி வலுவாக எழுகின்றது. அவ்வாறு இவர்களை யாராவது நிர்ப்பந்தித்தார்களாக இருந்தால் அவர்கள் யாராக இருக்கமுடியும்.? மிகக்குறைந்த வாக்குகளைப் பெற்றவர்கள் இதன்மூலம் பிரதிநிதித்துவம் பெற அடம்பிடிப்பது அவர்கள் மீதான சந்தேகத்தை மேலும் வலுவாக்குகின்றது. உண்மையில் தமிழ்த்தேசியத்தை நேசிப்பவர்களாக இருந்தால் அதிகூடிய வாக்குகளைப் பெற்றவர்களை அனுமதித்து வழிவிடுவதுதான் உயரிய பண்பு. அதைவிடுத்து தாமே அடம்பிடித்துச் செல்ல விரும்புவது மிகப்பெரிய ஜனநாயகப் படுகொலையும் கூட. இவ்வாறு இவர்கள் தாமே பிரதிநிதியாகச் செல்லவேண்டுமென அடம்பிடிப்பது எதனைக்காட்டுகின்றது. இதை மக்களே ஊகித்துக் கொள்ளட்டும். மேலும் தமிழீழ அரசு என்கின்ற கட்டமைப்பைத் தாங்கிநிற்கும் முக்கிய தூண்களில் ஒன்றான நாடுகள் வாரியான செயற்குழுவின் அடுத்தகட்ட நடவடிக்கைதான் என்ன?. மதியுரைஞர் குழுவின் அறிவுறுத்தலின்படி தேர்தலை நடத்தியவுடன் இக்குழு கலைக்கப்படவேண்டியதொன்றா? அவ்வாறு கலைக்கப்படின் மிகவும் ஒரு நெருக்கடியான காலகட்டத்தினுள் சவால்கள் நிறைந்த இந்தப்பணியைச் திறம்படச் செய்துமுடித்த தமிழ்த்தேசிய மனிதவலுக்கள் ஓய்வுநிலைக்குத் தள்ளப்பட்டுவிடுமல்லவா? ஆகவே இவ்வாறு இக்குழுக்கள் கலைக்கப்படவேண்டும் கட்டாயம் இருந்தால் இக்குழுக்களை தமிழீழ அரசின் ஒரு அங்கமாக அல்லது அதன்ஒரு இணை அமைப்பாக மீள்மாற்றுவடிவம் செய்யப்படவேண்டியது அவசியமானது. அதேநேரம் இக்குழுக்கள் தொடர்ந்தும் நாடுகள் வாரியான செயற்குழுவாகச் செயற்பட்டால் எதிர்காலத்தில் தேர்தல் ஆணையத்துடனும், பேராளர்களுடனும் உடன்படவோ, அல்லது அதிகாரப் போட்டியில் ஈடுபடுவதற்கோ சந்தர்ப்பங்களை ஏற்படுத்திவிடும். இதனைக் கருத்திற்கொண்டு நாடுகடந்த தமிழீழ அரசின் மையப்புள்ளியான மதியுரைஞர்குழு இதற்கான சரியான செயற்திட்டங்களை வகுக்கவேண்டியது இன்றைய காலத்தின் தேவையாகும். இவ்விடயங்கள் உடனடியாகத் தீர்வு கானப்படாவிடின் எமது பொது எதிரியான சிங்களபேரினவாதிகளுக்கும், தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்குரிய தமிழீழத் தேசிய சொத்துக்களை அபகரித்து. ஏப்பம் விட்டுவிட்டு. இன்றும் தாம் விடுதலைப் போராட்டத்தின் பங்கு தாரர்கள் என முகமூடி அணிந்துகொண்டு. மார்பு தட்டி எமது போராட்டத்திற்குள்ளேயே இருந்து கருவறுக்கமுயலும் கயவர் கூட்டமும், மக்கள் மத்தியில்; தேவையற்ற கருத்துருவாகத்தினை ஏற்படுத்துவதோடு பொய்களை புனைந்து உண்மைகளை திரித்தும், விரித்தும் உண்மைக்கு புறம்பான விதண்டாவாத வியாக்கினங்களை பரப்பி எமது விடுதலைப்பயணத்தை முடக்கி படிப்படியாக அழித்தொழிக்கமுனைவர்
நெருக்கடி மிகுந்ததும், சவால்கள் நிறைந்ததுமான ஒரு காலகட்டத்தில் நாடுகடந்த தமிழீழ அரசு. தமிழருடைய தன்னாட்சி உரிமையை நிலைநாட்டக் கூடியதும். புதிய சர்வதேச ஒழுங்கமைப்புக்கு இயைபாக தமிழர் தேசிய விடுதலைப் போராட்டத்தினை சர்வதேச பரிமானத்திற்கு இட்டுச் செல்லக்கூடிய தகுதியையும் அதிகாரத்தையும் கொண்டதோடு சர்வதேச அரசியல் அழுத்தங்களுக்கும் முகம் கொடுத்து புவிசார் அரசியல் நிலைப்பாட்டிற்கு ஏற்றவாறு தமிழர் விடுதலைப் போராட்டத்தின் மீது பிராந்திய நலக் கொள்கைகளை திணிக்க முடியாத அளவுடைய அதே நேரம் முற்று முழுதாக ஈழத்தமிழர்களின் சொந்த, பொருண்மிய, அரசியற் பலத்தில் நி;ன்று இயங்கக் கூடியதான அரசியற் செயற்பாட்டு நிறுவனமான நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை தாமதிக்காது வன்னிக்கறுப்பு நாட்களில் நிறுவி. முள்ளிவாய்க்காலில் வீழ்ந்துபோன பல்லாயிரம் ஈழமைந்தர்கள் மீது ஆணையிட்டு, உறுதியெடுத்து, விடுதலைப் போராட்டத்தின் வீச்சையும், எமது விடுதலை தாகத்தையும் உலகிற்கு எடுத்துரைக்க வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயமாகும். |










கடந்த வருட மே மாதம் வன்னியில் முள்ளிவாய்க்காலில் நடந்த மிகப்பெரும் மனிதப் படுகொலையின் மூலம்; தமிழர் தாயகத்தில் இருந்த தமிழீழ நடைமுறை அரசு வீழ்த்தப்பட்டது. இவ் விழ்ச்சியானது தமிழர் தாயகத்தில் ஓர் அரசியல் தலைமைத்துவ இடைவெளியை ஏற்படுத்தியிருக்கிறது. முள்ளிவாய்க்காலில் வீழ்த்தப்பட்டது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின்; ஆயுதப்போராட்ட வடிவமே. விடுதலைப் போராட்டங்கள் காலத்துக்கும் சூழலுக்கும் ஏற்றவாறு போராட்ட வடிவத்தை மாற்றி நகர்த்திச் செல்லப்பட வேண்டியதொன்று. போராட்டங்கள் இலக்கை நோக்கி செல்லும்போது ஏற்படும் தடைகளைத்தாண்ட பாதைகள் மாற்றியமைக்கப்படுவது தவிர்க்க முடியாததொன்றே. தமிழீழ விடுதலைக்கான போராட்ட பயணப்பாதையில் தற்போது ஏற்பட்டிருக்கும் தடையைத் தாண்ட நாடுகடந்த அரசு என்னும் அரசியல் வடிவிலான புதிய பாதை திறக்கப்பட்டிருக்கிறது.


















